திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக தொடர் மரணங்கள் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இன்றைய தினமும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அதாவது மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி உயிரிழந்துள்ளார்.
இவர் 2015ம் ஆண்டு வெளியான 'கந்தாரி' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் அதிகாலை 4:30 மணியளவில் கைப்பமங்கலம் என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்து காரணமாகவே 39வயதான இவர் மரணமடைந்துள்ளார். அதாவது டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோருடன் வடகரையில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் நடிகர் கொல்லம் சுதி.
அந்த சமயத்தில் இவர்கள் வந்த கார் எதிரே வந்த டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் இந்த திடீர் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!