வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பிரபல நடிகை மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடிஷா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி.மேலும் இவர் ஒடியா மற்றும் பெங்காலி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஓடிடி படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி. இவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவ் மொஹண்டியின் மனைவி ஆவார். இவ்வாறுஇருக்கையில் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் அவரது கூட்டாளி ஆயுஷி மீது புவனேஸ்வரில் உள்ள சஹீத்நகர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு நகைக் கடையில் வேலை வாங்கித் தருவதாக கூறி வர்ஷாவும், ஆயுஷியும் தன்னிடம் ரூ.30,000 மோசடி செய்ததாக கல்யாணி நாயக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்றுக் கொண்ட நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் ஆயுஷியை அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தனது புகாரில் கூறியுள்ளார்.
ஆனால் நடிகையும் நாடளுமன்ற உறுப்பினரின் மனைவியுமான வர்ஷா பிரியதர்ஷினி தன் மீதான புகாரை மறுத்துள்ளார். அத்தோடு தன் மீதான இந்த புகார் ஆதாரமற்றது என்றும் தனக்கு எதிரான சதிவேலை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி.அத்தோடு தன் மீது இப்படி பொய்யான புகார் அளித்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவேன் என்றும் நடிகை வர்ஷா பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மை இல்லாத இந்த செய்திகள் ஒளிபரப்பப்படும் விதம் உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. அதனால்தான், என் மீது இதுபோன்ற அவமானகரமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்களுக்கு எதிராக நான் சட்டப்படி சென்று, அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க முயற்சி செய்வேன் என பதிவிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதல், தன்னை ஒடுக்கும் நோக்கத்துடன் பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் தனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ள வர்ஷா பிரியதர்ஷினி, ஜெகன்நாதர் மீது தனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது, எந்த தடைகள் வந்தாலும் சோர்வடைய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.அத்தோடு உண்மை எப்போதும் வெல்லும் என்றும், இந்த விஷயத்திலும் அதுதான் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அனுபவ் மொஹண்டியின் மனைவி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!