கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம். நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறும் விதமாக தன்னுடைய கைகளைப் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையில் தூரிகையைக் கட்டிக் கொண்டு 'தல'யின் படத்தை வரைந்துள்ளார்.
தல என்பதை குறிக்கும் விதமாக கைகள் பயன்படுத்தாமல் சிறுகம்பியில் வளையம் மாதிரி செய்து அதில் பிரஷ் வைத்துக் கொண்டு தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு தன் தலையை அசைத்து அசைத்து நீர் வண்ணத்தில் பிரஷால் தொட்டு 15 நிமிடங்களில் 'தல' படத்தை தலையால் வரைந்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இன்றைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் அஜித். இவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவர். ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றவர். எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது நடிப்பால் உருவாக்கியுள்ளார்.
அவர் ஒரு சிறந்த மனிதர், ரசிகர்கள் மனதில் 'தல' என்று அன்போடு நிலைத்திருப்பவர். அதனால் அவருக்கு தலையால் ஓவியம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளேன்" என்றார்.
இந்த ஓவியத்தை அஜித் ரசிகர்கள் வியந்து பார்த்து ரசித்து ஓவியர் செல்வத்தைப் பாராட்டி வருகின்றனர்.
Listen News!