விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து சென்றிருக்கும் அசானிக்கு தங்களது சொந்த செலவில் வீடொன்றை அமைத்து தரப்போவதாக இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தக்குமார் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“இலங்கையிலிருந்து மலையகத்தை சேர்ந்த மாணவியொருவர் பாட்டு பாடுவதற்காக ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்காக இந்தியா சென்றுள்ளார்.
அவருக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எனது மகன் சார்பாகவும் கனடாவில் வசிக்கும் எனது குடும்ப உறவினர்கள் சார்பாகவும் சுமார் 15இலட்ச ரூபாய் செலவில் ஒரு வீட்டை நிர்மாணித்து கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
ஆகவே, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே, முதற்கட்டமாக எனது இணைப்பாளரை அசானியின் ஊருக்கு அனுப்பி இருக்கின்றேன்.
இதனடிப்படையில், அவருக்கான வீட்டை எவ்வாறு எங்கே கட்டி கொடுக்க முடியும் என ஆராய்ந்து எனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளேன்.“ என தெரிவித்தார்.
Listen News!