மலையாள சினிமாவில் முக்கிய பிரபலமாக திகழ்பவர் வினித் சீனிவாசன். இவர் பிரபல நடிகர் சீனிவாசனின் மகன். இதனைத் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக டைரக்ஷன் மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் வினீத் சீனிவாசன்.
அத்தோடு பாடலாசிரியர் தயாரிப்பாளர் கதாசிரியர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. இவரது படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதுமட்டுமல்ல இவர் படித்தது சென்னை லயோலா கல்லூரியில் தான். எனினும் தற்போது வசிப்பதும் சென்னையில்தான். தனது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் கேரளா சென்று வரும் வினித் சீனிவாசன், தனது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தையும் சென்னையில் தான் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த வருட துவக்கத்தில் இவர் இயக்கிய ஹிருதயம் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வினீத் சீனிவாசனிடம் நீங்கள் ஏன் துல்கர் சல்மான், பஹத் பாசில் போல தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த வினித் சீனிவாசன், “சுதந்திரம்தான் காரணம்.. இப்போது நான் சென்னையில் என்னைப்பற்றி யாரென்றே தெரியாத மக்கள் இருக்கும் பகுதியில் தான் வசிக்கிறேன்.. அதனால் என்னால் சுதந்திரமாக உலாவ முடிகிறது. தமிழில் படம் நடித்து ஒருவேளை அது வெற்றியும் பெற்றுவிட்டால் அதன்பிறகு எனது திரையுலக பயணத்திலும் சரி. வாழ்க்கை பயணத்திலும் சரி.. மாற்றங்கள் வர ஆரம்பித்துவிடும்.. எனக்கு இங்கே இப்போது கிடைக்கும் சுதந்திரம் பறிபோய்விடும். நான் மட்டுமல்ல.. மோகன்லாலின் மகன் பிரணவுக்கு கூட தமிழில் நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இதே சுதந்திரம் காரணமாகத்தான் அவரும் தமிழில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.. வேறு ஒன்றும் காரணமில்லை.. தமிழகம் எனக்கு பிடித்து இருப்பதால் தான் சென்னையில் வசிக்கிறேன்.. மாதத்திற்கு நான்கைந்து நாட்கள் மட்டும் கேரளா சென்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் வினீத் சீனிவாசன்.
Listen News!