தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வாத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷின் பழைய வழக்கு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்தனர். ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட கோரிய நிலையில், போலியான ஆவணங்களை தனுஷ் தாக்கல் செய்ததாக குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்தனர். அதில், "நடிகர் தனுஷ் என் மகன் என உரிமை கோரி வருகிறேன். இது தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் என் புகாரை விசாரிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டது.ஆனால் மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றம் என் வழக்கை தள்ளுபடி செய்தது. ஆவணங்களின் அடிப்படையில் எனது வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதித்துறை நடுவர் முடிவுக்கு வந்துள்ளார். தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை ஆராய அந்த சான்றிதழ் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவு வருவதற்குள் என் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனவே தனுஷ் மீது போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக வழக்கு பதிவு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனது மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனுஷின் அங்க அடையாள சோதனையின் போது, சில காலம் தாம் பதிவாளராக இருந்ததால், வேறு நீதிபதி அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!