தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் குண்டு கல்யாணம். சுமார் 500இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குண்டு கல்யாணம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தலையில் பெரிய பொட்டுவைத்து இருப்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதில் அளித்தார். அந்தவகையில் அவர் கூறுகையில் "மனிதராக பிறந்த அத்தனை பேருக்கும் ஏதோ ஒருவகையில் பக்தி இருக்கும், ஆனால் எனக்கு மூன்று வயது இருக்கும் போதே என் அப்பா நெற்றியில் விபூதி, பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் பழக்கப்படுத்தினார். அது அப்படியே எனக்குப் பழக்கமாகிவிட்டது" என்றார்.
மேலும் "என்னுடைய அப்பா குண்டு கருப்பையா அந்த காலத்தில் நாடக கம்பேனி வைத்து மிகவும் பிரபலமாக இருந்தார். அதேபோல் படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், 60 பேரை வைத்து நாடக கம்பேனி ஒன்றை ஆரம்பித்தார் அது சரியாக போகாததால், நஷ்ட்டம் ஆகிவிட்டது.
இதனால் கடைசி காலத்தில் அப்பாவின் இறுதிச்சடங்குக்கு கூட பணம் இல்லை. அந்த நேரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் எங்களுக்கு உதவி செய்தார். அதன் பின் என்னை படிக்க வைத்து என் குடும்பத்தை அவர் தான் பார்த்துக்கொண்டார். விசு சாரின் படத்தில் நடித்த போது அவர் எப்போதும் கதாபாத்திரத்தின் பெயரை வைத்துத்தான் கல்யாணம் என்று அழைப்பார். அதே போல பாலசந்தரும் கல்யாணம் என்று அழைப்பார். இந்த பெயரும் நன்றாக இருந்ததால், இந்த பெயரையே அப்பாவின் பெயரோடு சேர்த்து குண்டு கல்யாணம் என்று வைத்துக்கொண்டேன்" எனவும் கூறியுள்ளார் குண்டு கல்யாணம்.
அதுமட்டுமல்லாது "நானும் அப்பாவைப்போல நன்றாக குண்டாக இருப்பேன். ஆனால், தற்போது கிட்டினியில் பிரச்சனை இருப்பதால், வாரத்திற்கு இரண்டு நாள் டயாலிசிஸ் செய்து கொண்டு இருக்கிறேன். ஒரு முறை டயாலிசிஸ் செய்ய இரண்டு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை செலவாகிறது. கடந்த 3 வருடமாக டயாலிசிஸ் செய்து வருகிறேன். என்னுடைய மருத்துவ செலவையும் என்னையும் என் மகள் தான் பார்த்துக் கொள்கிறாள். மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற எந்த கெட்டப்பழக்கமும் எனக்கு இல்லை இருந்தாலும் கடவுள் எனக்கு இப்படி ஒரு பிரச்சனையை கொடுத்துவிட்டார்" என கண்கலங்கியவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் "ஜெயலலிதா அம்மா உயிரோடு இருந்து இருந்தால், நிச்சயம் எனக்கும் என் குடும்பத்திற்கும் உதவி செய்து இருப்பார் அவர் உயிரோடு இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பாகி விட்டது.கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு பல லட்சத்தில் செலவு ஆகும் என்கிறார்கள். உயிர் பிழைத்து வாழ யாராவது உதவி செய்தால் நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும்" எனவும் கண்கலங்க கூறியுள்ளார் குண்டு கல்யாணம்.
Listen News!