திரையுலகைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் சிலருக்கு விமான பயணத்தில் அவ்வப்போது சில அசௌகரியங்கள் ஏற்படுவதும், அதை அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துவதும் வழக்கமான ஒன்றாக நடக்கிறது.
இந்த வரிசையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் இணைந்து இருக்கிறார். அதாவது இவர் தனியார் விமானம் ஒன்றில் பயணித்தார். அப்போது அவரது பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மாயமாகி விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள ராணா, எந்த விமான நிலையம் எனப் பெயர் குறிப்பிடவில்லை. அவரது பதிவில் அவர் கூறுகையில் "இந்தியாவிலேயே மிக மோசமான விமானப் பயண அனுபவத்தை இண்டிகோ விமானத்தில் பெற்றிருக்கிறேன். தங்கள் விமானம் புறப்படும் நேரங்கள் கூட இண்டிகோவுக்கு தெரியவில்லை.
எனது லக்கேஜ் காணாமல் போய்விட்டது. அதை இண்டிகோ நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்நிறுவனத்தின் அலுவலர்களிடம் இதுகுறித்து புகார் அளித்தால், அவர்களுக்கும் இதை எப்படி கையாள்வது என தெரியவில்லை. இதை விட மோசமான ஒரு விஷயம் இருக்கிறதா?" என குறிப்பிட்டுள்ளார்.
ராணாவின் இந்த ட்விட்டர் பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் மட்டுமல்லாமல், இண்டிகோ நிறுவனத்தில் தங்களின் பயண அனுபவம் குறித்து ஆயிரக்கணக்கான நெட்டிசன்களும் விமர்சனத்தை அள்ளி வீசி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ நிறுவனம் ராணா ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளது. அதில், "எங்கள் விமானத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மேலும், காணாமல் போன உங்கள் லக்கேஜை கூடிய விரைவில் ஒப்படைக்க எங்கள் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!