கோலிவுட் சினிமாவில் சுப்பிரமணியம் திரைப்படம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் காலடி எடுத்து வைத்தவர் தான் சசிகுமார்.இவர் இதனைத் தொடர்ந்து நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, கிடாரி, பேட்ட உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்தாண்டு மட்டும் கொம்பு வச்ச சிங்கமடா, நான் மிருகமாய் மாற, காரி என மூன்று படங்கள் சசிகுமார் நடிப்பில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் தான் அயோத்தி.மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த அயோத்தி ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு அயோத்தி ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அயோத்தி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிறுகதை, கவிதை, நாவல் என தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமானவராக காணப்படும் எழுத்தாளர் நரன், அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என்ற குற்றசாட்டை முன் வைத்துள்ளாராம். தனது சரீரம் என்ற சிறுகதை தொகுப்பில் இடம்பெற்ற வாரணாசி சிறுகதை தான் அயோத்தி படத்தின் கதை எனவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
அந்த சிறுகதையில் ஒரு பெண் தன்னுடைய இறந்த கணவனின் உடலை தகனம் செய்ய, வாரணாசிக்கு எடுத்து செல்லும் பயணத்தை விவரிப்பதாக இருக்கும். தற்போது அயோத்தி படத்தின் ட்ரெய்லரும் அதுமாதிரி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக அயோத்தி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், சசிகுமார் உட்பட படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக இந்தப் படம் பற்றி பேசியிருந்த இயக்குநர் மந்திர மூர்த்தி, "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான கதை இது. கதையைக் கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகக்" கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!