மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உன்னிமுகுந்தன். மேலும் இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து 'சீடன்' படத்திலும் நடித்து இருந்தார். இவ்வாறாக தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்துப் பிரபலமான உன்னிமுகுந்தன் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதாவது "ஒரு படத்தில் நடிக்க வைப்பதாகவும், கதையை கேட்க தனது வீட்டுக்கு வருமாறும் உன்னிமுகுந்தன் அழைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்" என்று அப்புகாரில் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் தனக்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுகிறேன் என்று அந்த பெண் நிர்ப்பந்தம் செய்வதாகவும், எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் உன்னிமுகுந்தன் கோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட்டு தடை விதித்தது. அதுமட்டுமல்லாது இளம் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டு விட்டதாக உன்னிமுகுந்தன் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சமரச தீர்வு ஏற்படவில்லை என்றும், உன்னிமுகுந்தன் தொடர்ந்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து விசாரித்த ஐகோர்ட்டு உன்னிமுகுந்தன் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது.
ஆகவே அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என்றும் கோர்ட் அறிவித்து உள்ளது.
Listen News!