தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ரோஜா. இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
பின் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றி பெற்ற ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். தற்போது சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!