தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்போது திரிஷா நடிப்பில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் திரிஷா.
லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகத் தான் திரிஷா நடித்து வருகிறார். விஜய்யும் திரிஷாவும் இதற்கு முன்னர் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் தொடர்ந்து கோடியாக நடித்து வந்தாலும், கடந்த 14 ஆண்டுகளாக இவர்கள் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், தற்போது லியோ படத்தின் மூலம் அந்த சூப்பர் ஹிட் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
லியோ படத்திற்காக காஷ்மீர் சென்ற இரு தினங்களில் நடிகை திரிஷா டெல்லிக்கு திரும்பியதால் அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. ஆனால் காஷ்மீர் குளிர் ஒத்துக்கொள்ளாததன் காரணமாகவே அவர் டெல்லிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கு ஒரு வாரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் காஷ்மீர் சென்று லியோ ஷூட்டிங்கில் கலந்துகொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் .
இந்நிலையில், பிப்ரவரி 14-ந் தேதியான இன்று லியோ படக்குழுவினருடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார் நடிகை திரிஷா. இதற்காக லியோ படத்தில் பணியாற்றும் பெண்களுடன் சேர்ந்து சிவப்பு நிற ஆடை அணிந்து காஷ்மீரில் குரூப்பாக போட்டோ எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவுக்கு ரோஜா பூங்கொத்து ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளனர்.
தனது காதலர் தின கொண்டாட்டம் இப்படி தான் இருந்தது என பதிவிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Listen News!