ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகியோர்களின் வீடுகளில் சமீபத்தில் திருட்டு நடந்த நிலையில் தற்போது பிரபல நடிகை வினோதினி வீட்டிலும் திருட்டு நடந்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதாவது "சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் சற்றும் நம்பிக்கையில்லை. அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான்.
அதில் ஒருவர் வீட்டு பெயிண்டர், மற்றொருவர் மெக்கானிக். தேவைக்காக பணம் திருடிவிட்டனர். சிசிடிவி வீடியோ இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார்.
திருடியவர்கள் இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத் தெரியும். அந்த பெயிண்டர் தனியாக புரொஜெக்ட் வாங்கி வேலைப் பார்க்கிறவர். சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். லோயர் மிடில் கிளாஸில் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல உழைத்து வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள். பின் இவர்களை எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச் சூழலும் தானே" என்றார்.
மேலும் இப்பதிவில் "பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மாநில வரி, பெட்ரோல் விலை உயர்வு, எலக்ட்ரிக் பில் உயர்வு, வட்டி உயர்வு என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற மெட்ரோவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, டிராபிக், அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள், கார்ப்பரெட்களில் வேலை செய்யும் டெலிவரி பாய்ஸ் ஆகியோர்களின் உழைப்பை சுரண்டி கமிஷன் போக அவர்களுக்கு பிச்சைப்போடுவது போல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் - அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் - இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்" எனப் மிகப்பெரிய பதிவொன்றின் மூலமாக தெரிவித்துள்ளார் நடிகை வினோதினி.
இவ்வாறாக சமீபகாலமாகவே திரைப்பிரபலங்கள் பலரது வீட்டிலும் இடம்பெற்று வருகின்ற திருட்டுச் சம்பவங்களால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Listen News!