திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக பல திடீர் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது வாணி ஜெயராம், கே.எஸ்.விஸ்வநாதன், கஜேந்திரன் ஆகியோர் இழப்பைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடிகர் மயில்சாமியும் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மற்றோர் முக்கிய பிரபலமும் உயிரிழந்துள்ளார். அதாவது பிரபல சினிமா படத்தொகுப்பாளரான ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவ் என்பவர் இன்று அதிகாலை பெங்களூருவில் காலமானார். இவர் 200 க்கும் அதிகமான படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது கே. விஸ்வநாத், பாபு, ஜந்தியாலா, தாசரி நாராயண ராவ் மற்றும் பல பழம்பெரும் டோலிவுட் இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளார். இவருக்கு சினிமா மீது இருந்த தீராத ஆர்வத்தினால் இணை இயக்குநராகவும் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கின்றார்.
மேலும் இவர் தெலுங்கில் மட்டுமின்றி, சில இந்தி, தமிழ் மற்றும் கன்னட சினிமாவிலும் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்தவகையில் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த 'சலங்கை ஒலி' மற்றும் 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 'ஏழுமலையான் மகிமை' தமிழ்த் திரைப்படங்களிலும் படத் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல மொழிகளிலும் பணியாற்றி வந்த படத்தொகுப்பாளர் ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவின் திடீர் மறைவு தெலுங்கு திரையுலகினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!