தமிழ் சினிமாவில் நீண்ட இடை வெளிக்குப் பின்னர் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வரும் நடிகர் தான் அருண் விஜய். இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.சமீபத்தில் 'யானை' & 'சினம்' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .தற்போது அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குநர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார். ஏ.எல்.விஜய், நடிகர் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்.
பின்னர் தலைவா படத்தை நடிகர் விஜய் நடிப்பிலும், தாண்டவம் படத்தை சியான் விக்ரம் நடிப்பிலும் இயக்கியவர். கடைசியாக கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தலைவி படத்தை இயக்கினார்.
அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது. இந்த படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "அச்சம் என்பது இல்லையே" என பெயரிடப்பட்டுள்ளது.
இச்சூழலில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய் காலில் காயம் ஏற்பட்டது.இந்த காயத்தில் இருந்து மீண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.அதில்,"முழங்கால் காயத்திற்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெற்றுவருகிறேன். தற்போது நல்ல முன்னேற்றத்தை உணர்கிறேன். எனக்கான 4 ஆம் நாள் சிகிச்சை. விரைவில் படப்பிடிப்பிற்கு திரும்புவேன்" என அருண் விஜய் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் தான் சிகிச்சை பெரும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Listen News!