• Sep 20 2024

ஆர்யா, பிரபு, நரேன், பாக்கியராஜ் எனப் பலர் மிரட்டும்... 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் திரை விமர்சனம்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

முத்தையா இயக்கத்திலும் ஆர்யா நடிப்பிலும் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இப்படமானது ஆர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய ஒரு திருப்புமுனை கொடுக்கும் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார். இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் இப்படமானது பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் சண்டை செய்யும் ஊரைப் பற்றிய கதைக்களத்தை மையமாக கொண்டமைந்துள்ளது. அதாவது இப்படத்தில் அம்மா, அப்பா, தன்னை அரவணைத்து வளர்த்த மாமா பாக்கியராஜ் என அனைவரையும் இழந்து, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனி ஆளாக வளர்த்து வருகின்றார் தமிழ்ச்செல்வி (சித்தி இத்னானி).

இவரை அவரது முறைப்பையன்களுக்கு திருமணம் செய்து வைத்து அதன் மூலமாக அவரது சொத்தை அபகரிக்க தமிழ்ச்செல்வியின் சொந்தபந்தங்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால் இவர்களது முயற்சிகளுக்கு இடையே எதிர்பாராத விதமாக யாருக்கும் சம்பந்தமில்லாத காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் (ஆர்யா) சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்து தமிழ்ச்செல்வியின் முறைப்பையன்கள் உள்பட போவோர் வருவோரையெல்லாம் அடிக்கின்றார்.

எனவே ஆர்யா யார், எங்கிருந்து வந்தார், அவருக்கும் சித்தி இத்னானிக்குமான உறவு என்ன? ஆர்யாவின் பின்புலம் போன்ற கேள்விகளுக்குப் பதிலாக படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு

இதில் போவோர் வருவோரையெல்லாம் தூக்கிப் போட்டு அடித்து நொருக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக ஆர்யா உடலளவில் நன்றாகப் பொருந்திப் போயிருக்கார். இருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் வழக்கம்போல் சற்றுப் பொருந்தவில்லை என்று தான் கூற வேண்டும். 

மேலும் பஞ்ச் டயலாக்குகள் பேசும் இடங்களிலும் அவரது டயலொக் ரசிகர்களுக்கு சிரிப்பினை வரவழைக்கின்றது. 

மேலும் நடிகை சித்தி இத்னானியை சுற்றியே படத்தின் கதை சுழலுகிறது.  இவர் தாவணி பாவடை அணிந்து பாராட்டக்கூடிய அளவிற்கு நடித்திருக்கின்றார். இருந்தாலும் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்.

அதேபோன்று தடுக்கி விழுந்தால் சண்டை நடக்கும் முதல் பாதியைக் கடந்து இரண்டாம் பாதியில் ரகளையாக அறிமுகமாகி படத்துடன் நம்மை ஒன்ற வைத்து வழக்கம்போல் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறார் நடிகர் பிரபு. 

அதாவது காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கமாக நடித்துள்ள பிரபு இஸ்லாமிய சமூகத்து தலைவராக கம்பீரமாக வலம் வருவது, தன் பெண்ணுக்காக நடிகர் நரேஷின் காலில் விழச் செல்வது என சிவாஜி கணேசனை நியாகப்படுத்தி தன் நடிப்பால் அசத்தி இருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது இயக்குநர் தமிழ், ஆடுகளம் நரேஷ் ஆகியோர் முரட்டு வில்லன்களாக கச்சிதமாக வலம் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பாக்கியராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேஷ், விஜி சந்திரசேகர், தீபா, ரேணுகா, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்துக்குத் தேவையானதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

படம் பற்றிய அலசல் 

இப்படத்தினுடைய முதல் பாதியில் தன்னை கொஞ்சம் முறைத்தாலோ, உம் என்று சொன்னாலோ வேட்டியைக் கழற்றி வீசி ஒரு பத்து பேரை தூக்கிப் போட்டு அசால்ட்டாக ஆர்யா அடித்து நொறுக்கிக்கொண்டே இருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கொட்டாவியையே வரவழைக்கிறது.  

அதேபோன்று ஆர்யா யார், எங்கிருந்து வந்துள்ளார் என்பதை விளக்காமல், சித்தி இத்னானியின் பாதுகாவலராக ஆர்யாவை சுற்றவிட்டு முதல் பாதியைக் கடத்துவது பயங்கர போரிங்காக உள்ளது.

இருந்தாலும் இப்படமானது இரண்டாம் பாதியில் தான் சூடுபிடிக்கிறது.  மேலும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படத்தை சற்று சுவாரஸ்யமாக்கினாலும் அதன் பின் திரைக்கதை மீண்டும் ரசிகர்களை சோர்வடைய வைக்கின்றது.

இதில் ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களில் புதுமை எதுவும் இல்லை என்று கூறலாம்.

படத்தின் பின்னணி இசை ரசிகர்களின் காதுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

அதேபோல் அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. 

தொகுப்பு

மொத்தத்தில் சலிப்பு தட்டும் முதல் பாதியை விறுவிறுப்பாக்கி, இரண்டாம் பாதியைப் போலவே கொடுத்திருந்தால் தரமான ஆக்‌ஷன் படமாக காதர்பாட்சா  என்ற முத்துராமலிங்கம் கெத்து நடைபோட்டிருக்கும் என்று தான் கூற வேண்டும்.

Advertisement

Advertisement