சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் பல திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகின்றது. அந்த வகையில் எந்திரன், விஸ்வரூபம், பாகுபலி, திரிஷ்யம், KGF, பில்லா, மாரி, வி.ஐ.பி போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆனது.
அதனை தொடர்ந்து இந்தியன், புஷ்பா போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களும் தொடங்கப்பட்டன. ஆனால் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது திருஷ்யம் 2 மட்டும்தான். 2.O, பில்லா 2, விஸ்வரூபம் 2, மாரி 2, வி.ஐ.பி 2 போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பெயர்களை கெடுத்துக் கொண்டது.
மேலும் KGF படம் ஏற்படுத்திய தாக்கம்தான் அதன் இரண்டாம் பாகத்தை இமாலய வெற்றியடையச் செய்தது. அதனால் பழைய பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் பிராண்டை பயன்படுத்தி வியாபாரம் செய்ய பலரும் எண்ணுகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்தின் பாட்ஷா திரைப்படம் அவருடைய கேரியரிலேயே முக்கியமான படம்.
அதனுடைய இரண்டாம் பாகத்தை இயக்க ரொம்பவே ஆர்வமாக இருப்பதாக பாட்ஷா இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். ஆனால் அந்தப் படத்தில் கை வைக்கக் கூடாது. பாட்ஷா என்பது ஒற்றைப் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினி முன்னர் கூறியுள்ளாராம்.
ஒரு வேளை பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருடைய எண்ணத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவருடைய அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன் என்றும் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!