தமிழ், மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலா. தமிழில் குறிப்பாக இவர் அஜித்தின் தம்பியாக 'வீரம்' என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
அதுமட்டுமல்லாது 'காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்வம்' உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். அத்தோடு மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். அதிலும் குறிப்பாக பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' என்ற மலையாள படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றி பெற்றது.
அதாவது ரூ.2 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.14 கோடி வசூலித்ததாக கூறப்படுகிற்து. இதில் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து அவரே தயாரித்தும் இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்த தனக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் உன்னி முகுந்தன் பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை என்று பாலா சமீபத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உன்னி முகுந்தனை பாலாவின் ரசிகர்கள் முற்றுகையிட்டு சம்பளம் கொடுக்காததை கண்டித்து கேள்வி எழுப்பினர். இதனால் உன்னிமுகுந்தன் ரசிகர்களுக்கும், பாலா ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதுகுறித்து பாலா கூறும்போது, ''உண்மை எப்போதும் உறங்காது. எனக்காக குரல் கொடுத்த என்னுடைய ரசிகர்களுக்கு மிக்க நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.
Listen News!