இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பிரபல யூட்யூபர் இர்ஃபான் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருக்கிறார்.
உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். மேலும் அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் இர்ஃபான்ஸ் வியூ. இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இந்த யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை ஆரம்பத்தில் பதிவு செய்துவந்தார். அவரது எளிமையான பேச்சும், தேடி தேடி வித விதமாக உணவு குறித்த வீடியோக்களை அப்லோட் செய்ததாலும் வெகு சீக்கிரத்திலேயே பிரபலம ஆனார் இர்ஃபான்.
உள்ளூரில் மட்டும் வீடியோ செய்துகொண்டிருந்த இர்ஃபான் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அங்கிருந்து அவர் அப்லோட் செய்த வீடியோக்களும் பிரபலமடைந்தன. மேலும் தமிழ்நாட்டுக்குள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்கும் இவரை பலரும் ரசிக்கின்றனர்.
அதேபோல் நடிகர் நெப்போலியனின் மகன் இவருடைய தீவிர ரசிகர் ஆவார். எனவே அவருக்காக அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனின் வீட்டுக்கு சென்று அதுகுறித்து இர்ஃபான் அப்லோட் செய்த வீடியோவும் ட்ரெண்டாகியது. அந்த வீடியோவில் தனது மகனுக்காக அமெரிக்கா வந்ததற்கு நன்றி தெரிவித்திருக்கும் நெப்போலியன்; இர்ஃபானுக்கு ஐஃபோன் ஒன்றையும் நெப்போலியன் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுஇருக்கையில் யூட்யூபர் இர்ஃபான் தற்போது பாடகராகவும் மாறியிருக்கிறார். அத்தோடு வாகை சூட வா, பாபநாசம், தூங்காவனம், துணிவு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் இர்ஃபான். ஆனால் இது திரைப்படத்துக்காக உருவான பாடலா இல்லை தனியாக உருவாக்கப்பட்ட பாடலா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
பாடல் பாடியது குறித்து இர்ஃபான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " பாட அழைத்ததற்கு நன்றி ஜிப்ரான் அண்ணா. அதைவிட நம்முடைய பிரியாணி பற்றிய பேச்சு மிகவும் கலகலப்பாக இருந்தது. இனிமேல் நீங்கள் எல்லோரும் என்னை பாடகர் இர்ஃபான் என்றுதான் கூப்பிட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இர்ஃபான் பாடல் பாடியது குறித்து இசையமைப்பாளர் தனது ட்விட்ட்டர் பக்கத்தில், "உங்களை பாட வைத்தது மிகவும் எளிமையாக இருந்தது சகோதரரே. அடுத்த முறை பிரியாணி பாடல் ஒன்றை நாம் உருவாக்கி உங்களையும், என்னையும் போன்ற பிரியாணி பிரியர்களுக்கு அந்தப் பாடலை சமர்ப்பிப்போம்" என தெரிவித்துள்ளார்.
Listen News!