பாலிவுட் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராக புகழ்பெற்றவர் சதீஷ் கௌஷிக்.கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் இந்தியா திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து பெரும்பாலான மக்களை கவர்ந்து வந்தார்.
சதீஷ் கௌஷிக் முதன் முதலில் இயக்கிய படம் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா ஆகும். ஸ்ரீதேவி, அணில் கபூர் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து பிரேம் படத்தையும் அவர் இயக்கினார்.
தமிழில் பாலா இயக்கி வெளியான படம் சேது. சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து பெருவாரியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தை இந்தியில் 'தேரே நாம்' என்ற பெயரில் சதீஷ் இயக்கினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சதீஷ் கௌஷிக் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பால் சதீஷ் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக எழுதியிருந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஜாவித் அக்தர் இல்லத்தில் நடைபெற்ற ஹோலி தின கொண்டாட்டத்தில் சதீஷ் கலந்துகொண்டார். அதில் நடிகர் அலி ஃபைசல் அவருடைய மனைவி ரிச்சா ஆகியோருடன் சதீஷ் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து,"நண்பர் ஜாவித் அக்தர் ஏற்பாடு செய்திருந்த வண்ணமயமான கொண்டாட்டம் நிறைந்த ஹோலி பார்ட்டியில் கலந்துகொண்டேன். புதுமண தம்பதிகளான அலி ஃபைசல் மற்றும் ரிச்சாவை சந்தித்தேன். அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை தின வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Listen News!