சினிமாப் பயணத்தின் ஆரம்பத்தில் மலையாள படங்களில் அதிகளவில் ஹீரோவாக நடித்து வந்தவர் நரேன். இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார்.
அப்படத்தினைத் தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம்' ஆகிய படங்களில் நடித்த நரேனுக்கு 'அஞ்சாதே' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் தமிழில் வெளியான படங்கள் எதுவும் இவருக்குப் பெரிதாக கை கொடுக்காத நிலையில், மீண்டும் மலையாளத்திலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார் நரேன்.
அங்கு ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும், குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்த நரேன் மீண்டும் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது கமல்ஹாசன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி 450 கோடி வசூல் ஈட்டிய 'விக்ரம்' என்ற படத்திலும் ஏஜென்ட் பிஜோய் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் நரேன் தனது 15ஆவது திருமண ஆண்டில் தனது மனைவி மஞ்சு ஹரிதாஸ் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சந்தோசத்துடன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு நரேனுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் அறிவிப்பையும் போட்டோ போட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் நரேன்.
இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு டிவி தொகுப்பாளினியான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தன்மயா என்ற பெண் குழந்தை அடுத்த ஆண்டே பிறந்துள்ளது. தற்போது அந்த பெண் குழந்தைக்கு 14 வயதாகும் நிலையில் நரேன்- மஞ்சு ஹரிதாஸ் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக திருமணம் ஆகி 15 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ள அறிவிப்பை அறிந்த தென்னிந்திய சினிமாப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் நரேனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!