பிரபல இசைக்கலைஞர்களில் ஒருவரான ரிக்கி கேஜ், பெங்களூருவில் ஏஞ்சல் டஸ்ட் என்ற ராக் இசைக்குழுவின் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர். இருப்பினும் இவர் ஏஞ்சல் டஸ்ட் இசைக்குழுவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் முழுநேர இசையமைப்பாளராக மாறத் தொடங்கினார்.
அதுமட்டுமல்லாமல் 2003 இல் தனக்காக சொந்த ஸ்டுடியோ ஒன்றையும் நிறுவினார். இதன் மூலமாக இதுவரை 3,000 விளம்பரங்கள் உட்பட கன்னட படங்கள் சிலவற்றிற்கும் இசை அமைத்துள்ளார் ரிக்கி கேஜ். இவ்வாறாக ரிக்கி கேஜின் படைப்புகள் பல வகைகளில், பல துருவங்களில் இருந்தாலும், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை, மற்றும் கர்நாடக இசையின் அடிப்படை சாராம்சம் என்பவற்றை தழுவியே அவரது ஆல்பங்கள் பெரும்பாலும் அமைந்து இருக்கும்.
இந்நிலையில் தான் இவர் தற்போது மாபெரும் விருது ஒன்றினை வென்றிருக்கின்றார். அதாவது இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 65-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். இதில் முக்கிய விடயம் என்னவெனில் குறிப்பாக இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜுக்கும் இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில் அவரின் டிவைன் டைட்ஸ் என்கிற ஆல்பத்திற்காகவே இந்தக் கிராமி விருதை வென்றுள்ளார். இது அவர் வெல்லும் மூன்றாவது கிராமி விருது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் அதாவது கடந்த 2015 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் அவர் இந்த விருதை வென்று இருந்தார்.
இவ்வாறாக மீண்டும் 3ஆவது முறையாக கிராமி விருது வென்ற ரிக்கி கேஜுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை டுவிட்டர் பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ரிக்கி கேஜ்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் "மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பேச வார்த்தைகள் இல்லை. நான் இந்த விருதை இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" என மிகவும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் ரிக்கி கேஜ்.
Listen News!