இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார் காயத்ரி.
அப்போது தன்னுடைய வீட்டில் பல பழங்கால பொருட்கள் இருப்பது குறித்து பேசிய அவர் ஷூட்டிங்கிற்கு வெளியே செல்லும்போது ஆசைப்பட்டு வாங்கியவை அவை என சொல்லியிருக்கிறார்.
மேலும், ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போது மனதுக்கு பிடித்து இந்த பொருட்களை வாங்கியதாகவும் இதற்கு பின்னால் வேறு எந்த காரணங்களும் இல்லை என தெரிவித்திருக்கிறார். சமூக நலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவரான காயத்ரி கிருஷ்ணன், திருநங்கைகளின் நலனுக்காக இயங்கி வருகிறார். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை முடித்த பிறகு சென்னைக்கு வந்ததாகவும் திருநங்கைகள் பற்றி ஆய்வு செய்தது மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனக்கு புத்தர் சிலைகள் பிடிக்கும் என கூறிய காயத்ரி, அவருடைய பொன்மொழிகள் பிடிக்கும் என்றாலும் புத்தரின் சிலை தனக்கு மன மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்திருக்கிறார். கொரோனா காலத்தில் தோழிகளுடன் இதே வீட்டில் தங்கி இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், வீட்டில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் தனக்கு பிடித்தபடி அமைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Listen News!