தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை டிம்பிள் ஹயாதி. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். அந்தவகையில் பிரபுதேவாவுடன் இணைந்து 'தேவி 2' படத்திலும், விஷாலுடன் இணைந்து 'வீரமே வாகைசூடும்' படத்திலும் இவர் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் டிம்பிள் ஹயாதிக்கும் ஆந்திர போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே என்பவருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டிருந்தது. அதாவது போலீஸ் அதிகாரியின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்தாகவும், தனது காரை பின்னால் எடுத்து மோதி சேதப்படுத்தியதாகவும் நடிகை மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் குறித்த போலீஸ் அதிகாரியின் உடைய கார் டிரைவர் புகார் ஒன்றினை அளித்தார். இதனைத் தொடர்ந்து நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்தவகையில் அதில் அவர் "போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது இவ்வாறு தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நடிகை டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுதுள்ளார். அதுமட்டுமல்லாது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறாக போலீஸ் அதிகாரி மற்றும் நடிகைக்கு இடையில் இடம்பெற்ற மோதல் விவகாரம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!