ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் வாசு இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ரஜினி கரெக்டரில் நடித்துள்ளார்.
இவருடன் கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குநர் பி வாசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட வடிவேலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மாமன்னனில் நடித்தது தனக்கு பெருமையாக இருந்ததாகவும், அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானதிலும் தனக்கு மகிழ்ச்சி என்றார்.
அதேபோல், சந்திரமுகி 2ம் பாகமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என வடிவேலு நம்பிக்கையுடன் கூறினார். மேலும், ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2வில் நடித்துள்ளார். ஆனால் அவரும் ரஜினிகாந்த் மாதிரியே நடிப்பில் மிரட்டியுள்ளதாக தெரிவித்தார். சந்திரமுகி 2 படத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என செய்தியாளர் கேட்டதற்கு, "அத நீங்க பி வாசு கிட்ட தான் கேட்கணும், அவருதான் இந்தப் படத்தோட டைரக்டர்" என செய்தியாளர்களையே கலாய்த்தார்.
அதேபோல், "சந்திரமுகி முதல் பாகத்தில் செத்துப் போன கோபால், 2ம் பாகத்தில் உயிருடன் வருவான். அத நீங்க தியேட்டர்ல போய் பாருங்க" என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!