பாலிவுட் சினிமாவில் 'பாட்ஷா, சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது 'பதான்' திரைப்படம் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படமானது கடந்த 25-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.
இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் வில்லனாக ஜான் ஆபிரஹாமும் நடித்துள்ளனர். அத்தோடு ஷாருக்கான் ரகசிய உளவாளியாக நடித்துள்ள இப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாது 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்கெனவே இப்படத்திற்கு நிலவி இருந்தது.
இருப்பினும் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளையும் கிளப்பி இருந்தது. அதாவது அதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார். ஆனால், தீபிகா காவி நிறத்தில் பிகினி உடை அணிந்திருந்ததால் அது மிகப் பெரிய சர்ச்சையாக பல இடங்களிலும் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், குஜராத் மாநிலம் அஹமதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் பஜ்ரங்தள அமைப்பினர் பல போராட்டங்களை நடத்தினர். அதுமட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் பாய்காட் பதான் என ட்ரோல் செய்தும் வந்தனர்.
இவ்வாறான பல சர்ச்சைக்கு மத்தியில் படம் ரிலீஸ் ஆனால் எப்படி வசூல் இருக்கும், கூட்டம் இருக்குமா என ரசிகர்களாலும் யோசிக்கப்பட்டது. இத்தடைகள் அனைத்தினையும் முறியடித்து தற்போது பதான் படமானது வசூலில் மாபெரும் சாதனை படைத்தது வருகின்றது.
அந்தவகையில் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பதான் படம் சர்வதேச அளவில் 877 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் படம் 900 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு விரைவில் ரூ.1000 கோடி கலெக்ஷனை எட்டிவிடும் எனவும் கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் கேஜிஎப் 2 படத்தின் வசூல் 430 கோடியாக இருந்த நிலையில், தற்போது பதான் படத்தின் இந்திய வசூல் 446 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனிடையே பிரபாஸின் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்க பதான் படத்திற்கு இன்னமும் 64 கோடி ரூபாய் தேவைப்படுவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Listen News!