பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் தற்போது செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ், கே.ராஜன் உள்ளிட்டோர் நடிப்பின் பகாசூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படமானது பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.
இந்நிலையில் பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பகாசூரன் குறித்து விமர்சனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "பகாசூரன் படத்தில் செல்வராகவன் தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கிறார். அவருக்கான ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கிறது. சிவன் குறித்த பாடல்களை பாடியே சிவனடியாராக மாறுகிறார்.
அந்த சமயத்தில் இளம்பெண் ஒருவர் முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அப்படி செய்த முதியவரை கொன்றுவிட்டு பெண்ணை காப்பாற்றுகிறார் செல்வராகவன். மகள் கல்லூரியில் படிக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. அங்கு காதலிக்கும் பெண் தன் காதலரை வீட்டுக்கு அழைத்துவருகிறார். அதுமட்டுமின்றி கல்லூரியில் வைத்து லிப்லாக்கும் செய்கிறார். அதை பெண்ணின் காதலர் புகைப்படம் எடுத்து வார்டனுக்கு அனுப்புகிறார்.
இப்படி சிக்கும் பெண்களை வார்டன் விபசாரத்திற்கு தள்ளுகிறார். அதனையடுத்து ராதாரவியால் அந்தப் பெண் சீரழிக்கப்படுகிறார். இடையில் மூன்று கொலை நடக்கின்றன. நட்ராஜ் ரிட்டையர்டு மேஜராக தோன்றுகிறார். அவர் இந்த கொலை வழக்குகளில் காவல் துறைக்கு உதவி புரிகிறார்.
பகாசூரனில் டெக்னிக்கலாக பல விஷயங்கள் சரியில்லை. உதாரணமாக எடிட்டிங், ஒளிப்பதிவு போன்றவை சுத்தமாக சரியில்லை. ஒளிப்பதிவில் பெரிய தவறுகள் இருக்கின்றன. இதை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். திரைக்கதை மோசமாக தள்ளாடுகிறது. தெருக்கூத்து கலைஞரான செல்வராகவன் விஜய் அளவுக்கு சண்டை போடுவதை நம்ப முடியவில்லை.
தெருக்கூத்து காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் மோகன் ஜி அதில் தவறிவிட்டார். இருப்பினும் படம் இன்றைய தலைமுறையினருக்கு ஆபத்தான வழிமுறைகளை அடையாளம் காண்பிக்கிறது" என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார்.
Listen News!