தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பா. ரஞ்சித்.இதனைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த பா. ரஞ்சித், தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பழைய காலகட்டத்தில் நடக்கும் கதை தான் தங்கலான் என இந்த படத்தின் அறிமுக வீடியோ மூலம் தெரிய வருகிறது.
திரைப்படங்களை ஒரு பக்கம் இயக்கி வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் வருகிறார் .அந்த வகையில், அவரது தயாரிப்பில் உருவாகி இருந்த பொம்மை நாயகி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தினைத் திறந்து வைக்க வருகை தரும்படி கமல்ஹாசனை அழைத்தார். அதன்படி, நாளை (12.02.2023) காலை 11:30 மணிக்கு சென்னை எக்மோரில் உள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் தொடங்கி வைக்க இருக்கிறார்.தங்கலான் படத்தை தொடர்ந்து, கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக சில பேட்டிகளில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Listen News!