தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ரஜினி, கமல், அஜித், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை தான் மீனா. அவரது மழலை முகத்தையும், கொஞ்சும் குரலையும், திறமையான நடிப்பையும் பார்த்த ரசிகர்கள் அவரை தமிழ்நாட்டின் கனவுக்கன்னியாகவும் கூறி வந்தனர்.
சிறு வயதிலிருந்தே மீனா நடிக்க ஆரம்பித்து சினிமாவின் சூது வாதுகளை தெரிந்துகொண்டார் என்பதைவிட அவரது தாய் மீனாவுக்கு அதையெல்லாம் சொல்லிக்கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு அரணாக மீனாவுக்கு பல வருடங்களாக இருந்தவர் அவர். இதன் காரணமாக மீனா மீது திரையுலகினர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றனரோ அதே அளவு மீனாவின் தாய் ராஜமல்லிகா மீதும் வைத்திருக்கின்றனர்.
சமீபத்தில் மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "மீனாவை பற்றி பேசுவதற்கு முன்னதாக அவரது தாய் பற்றி பேச வேண்டும். முத்து படத்தின் அவுட்டோர் ஷூட்டிங், ப்ளாஷ்பேக் காட்சிகளை முதலில் மைசூரில் ஷூட் செய்தோம். அந்த போர்ஷனில் மீனாவுக்கு வேலை இல்லை. மாறாக சரத்பாபுவுடன் வரும் இன்னொரு ஹீரோயின் தான் நடித்துக்கொண்டிருந்தார்.
இதை பார்த்த மீனாவின் தாய் என்னிடம் வந்து, ஏனப்பா நாட்டாமை படத்தில் நீதான் மீனாவுக்கு சூப்பரான ரோல் கொடுத்த. முத்து படத்துல அவரை செகண்ட் ரோலாக போட்டிருக்கியே. என்னப்பா இப்டி பண்ணிட்ட என்றார். அதன் பிறகு தமிழ்நாடு வந்து அரண்மனையில் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தபோதும் என்னிடம் வந்து என்னப்பா செந்தில்,வடிவேலு, விசித்திரா எல்லாரும் இருக்காங்க. இந்த கும்பலுல என் பொண்ணு காணாமப்போயிடுவா என சொன்னார்.
அதற்கு நான் என் மேல் நம்பிக்கை இருந்தா அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டேன். மீனாவுக்கு இந்தப் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என படம் பார்க்கும்வரை அவர் நம்பவில்லை. படத்தை பார்த்துவிட்டு என்னிடம் இனி எப்போ டேட் கேட்டாலும் நாங்க கொடுத்துடுறோம் என மீனாவின் தாய் சொன்னார். அதன்படிதான் தெனாலி படத்தில் சில நிமிட காட்சிக்கும், நட்புக்காக படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கும் மீனாவின் டேட்ஸ் கிடைத்தது. அப்படி மீனாவின் தாய் அவ்வளவு சிறப்பானவர். மீனாவிடம் இருக்கும் ஒரே மைனஸ் என்னவென்றால் அவர் எவ்வளவு கோபப்பட்டு நடித்தாலும் அதை நம்மால் உணர முடியாது. ஏனென்றால் அவரது முகம் அவ்வளவு மழலைத்தன்மை வாய்ந்தது" என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!