தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.
மேலும் மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்து கொண்டார். இத்தம்பதிக்கு நைனிகா என்கிற ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.
மண வாழ்க்கையில் இணைந்த பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட மீனா, முக்கியமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். மீனாவின் மகள் நைனிகாவும் விஜய்யின் 'தெறி' என்ற படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.
மீனா திருமணம் செய்துகொண்ட பின்னரும் அவரை படங்களில் நடிக்க அனுமதித்து அவருக்கு பெரும் பக்க பலமாக இருந்த அவரது கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் காலமானார்.
கணவர் வித்யாசாகரின் மறைவால் மனமுடைந்து போன மீனா சில நாட்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் அவரது நெருங்கிய தோழிகளின் முயற்சியால் அதிலிருந்து படிப்படியாக மீண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் அவரது இரண்டாவது திருமணம் பற்றிய தகவல் ஒன்று தற்போது டோலிவுட் வட்டாரத்தில் காட்டுத் தீ போல் பரவி வந்தது.
இதுகுறித்து நடிகை மீனா தற்போது "எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே" எனக் கூறியுள்ளார்.
Listen News!