இந்தியில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் மனோஜ் பாஜ்பாய். அதுமட்டுமல்லாது இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். அதாவது விஷாலின் சமர், சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இவர் இந்தியில் தான் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் சமந்தாவுடன் இணைந்து இவர் நடித்த பேமிலிமேன் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது உணவு பழக்கம் குறித்து மனோஜ் பாஜ்பாய் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அந்தவகையில் இவர் அளித்துள்ள பேட்டியில், "நான் இரவு உணவை சாப்பிட்டு 14 வருடங்கள் ஆகிவிட்டது. எனது தாத்தா நல்ல உடல் வலுவோடு ஆரோக்கியத்துடன் இருப்பார். அவரைப்போல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடுகிறார் என்று கவனித்தேன். அவர் இரவில் சாப்பிடுவது இல்லை" என்றார்.
மேலும் "போகப்போக தாத்தாவின் உணவு பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இரவு உணவை தவிர்த்து முழுமையாக இரவு சாப்பிடுவதை நிறுத்தினேன். மதிய உணவுக்கு பிறகு எனது வீட்டின் சமையலறை செயல்படாது. எங்கள் மகள் ஹாஸ்டலில் இருந்து திரும்பி வந்தால் மட்டுமே அது செயல்படும்" என்றார்.
அதுமட்டுமல்லாது "இரவு சாப்பிடாமல் இருப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பசி எடுத்தால் அதிக தண்ணீர் குடிப்பேன். பிஸ்கட்டுகள் சாப்பிடுவேன். இரவு உணவை தவிர்த்தது நல்ல பலனை கொடுத்தது. நீரழிவு நோய், இதயம் சம்பந்தமான நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள இந்த பழக்கம் பெரிய உதவியாக இருந்தது'' எனவும் கூறி உள்ளார் மனோஜ் பாஜ்பாய்.
Listen News!