பிரபல பஞ்சாபி நடிகர் மங்கள் தில்லான் கேன்சர் பாதிப்பால் காலமானார்.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மங்கள் தில்லான்.
சில மாதங்களாக கேன்சர் பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்துள்ளார்.48 வயதில் மறைந்த மங்கள் தில்லானுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர், தனியார் சேனல்களில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால், ரசிகர்களிடம் பிரபலமான மங்கள் தில்லான், திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார்.
கூன் பாரி மாங் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மங்கள் தில்லானுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. இதனால், ஒரேநேரத்தில் சின்ன திரை, சினிமா என இரண்டிலும் செலிபிரிட்டியாக வலம் வந்தார். நடிப்பை கடந்து இயக்குநர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து மேலும் தனது திறமையை வளர்த்துக்கொண்ட மங்கள் தில்லான், இந்தியில் அதிகமான படங்களில் நடித்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வில் இருந்துள்ளார். நாளுக்கு நாள் இவரது உடல்நிலை மோசமானதால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு குடலில் கேன்சர் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையறிந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் மங்கள் தில்லான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!