சினிமாத்துறையில் பிரபல துணை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாந்தி. இவர் சென்னை மாங்காடு அடிசன் நடிகர் பகுதியில் தனது கணவர் செல்வராஜ் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகின்றார்.
இருப்பினும் இவரின் மூத்த மகன் திருமணம் ஆகி குடும்பத்துடன் சென்னையை அடுத்த படைப்பையில் வசித்து வருகிறார். அதேபோல் அவர்களின் ஒரே மகளான பிரியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு அருகிலேயே தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
செல்வராஜ் - சாந்தி தம்பதியின் இளைய மகனான பிரகாஷ் கஞ்சா போதைக்கு மிகவும் அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்ட பிரகாஷை குடும்பத்தினர் மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பிரகாஷை மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த பிரகாஷ் யாருமே எதிர்பாராத நேரத்தில் அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த தனது அப்பா செல்வராஜை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அங்கு அவருடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முற்ற இறுதியில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது சகோதரியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
மேலும் நடிகை சாந்தி தனது மகன் பிரகாஷுக்கு மருந்து வாங்க கடைக்கு சென்றதால் அவர் எந்த ஒரு ஆபத்துமின்றி உயிர் தப்பினார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட தந்தை செல்வராஜ், மகள் பிரியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்வாறாக மகனின் போதை வெறிக்கு கணவரையும் மகளையும் பறிகொடுத்துள்ளார் சினிமா நடிகை சாந்தி. இந்த சம்பவமானது அவர்களின் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் கதறி அழுது கண் கலங்க வைத்துள்ளது.
Listen News!