தென்னிந்திய சினிமாவில் அன்று முதல் இன்றுவரை ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா.இவர் லேடி சூப்பர் ஸ்டார் என சிறப்பாக அழைக்கப்பட்டு வந்தாலும், சினிமாவில் அறிமுகமானது முதல் இன்றுவரை அவர் சர்ச்சைகளின் ராணியாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.
குறிப்பாக அவருடைய 19 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சந்தோசங்களை விட சர்ச்சைகள் தான் ஏராளம். அதாவது நயன்தாராவின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் பல வலிகளும், கண்ணீரும், சர்ச்சைகளும் தான் அடங்கி இருக்கிறது. அவ்வாறாக அவர் கடந்து வந்த பாதையில் எதிர்கொண்ட பல சர்ச்சைகள் பற்றி விரிவாக நோக்குவோம்.
அந்தவகையில் நயன்தாரா முதன்முதலில் சிக்கிய சர்ச்சை என்றால் அது சிம்பு உடனான காதல் குறித்த சர்ச்சை தான். அதாவது 'வல்லவன்' என்ற படத்தில் நடித்தபோது சிம்புவுடன் நயன்தாராவுக்கு அமோக காதல் ஏற்பட்டது.
அப்போது இருவரும் காதல் என்ற பேரில் நெருங்கி பழகி வந்த நிலையில், அப்பட ரிலீசுக்கு பின் திடீரென பிரேக் அப் செய்து பிரிந்தனர். ஆனாலும் அப்போது இவர்கள் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலவும் வெளியாகி கோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியதை இன்றும் யாராலும் மறக்க முடியாது.
சில ஆண்டுகளுக்கு பின்னர் சிம்புவுடனான காதல் சர்ச்சை சிறிது ஓய்ந்த பின்னர், நயன்தாரா அடுத்ததாக பிரபுதேவாவை காதலிக்கத் தொடங்கினார். ஏற்கனவே திருமணமான பிரபுதேவாவை நயன்தாரா விடாமல் தொடர்ந்து காதலித்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
அந்த நேரத்தில் நயன்தாராவை பார்த்தால் கொஞ்சம் கூட மதிக்காது காலால் எட்டி உதைப்பேன் என பிரபுதேவாவின் மனைவி சொன்னது சினிமா வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது எதனையும் பொருட்படுத்தாது ஒரு கட்டத்தில் பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்ற நயன்தாராவின் இந்த காதலும் இறுதியில் தோல்வியில் தான் முடிந்தது.
இருப்பினும் பிரபுதேவாவை காதலித்தபோது நயன்தாரா ஒரு முக்கிய அறிவிப்பை ரசிகர்களுக்கு வெளியிட்டார். அதாவது தெலுங்கில் உருவான 'ராமன் சீதை' திரைப்படம் தான் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் கடைசி திரைப்படம் என்றும், அப்படத்திற்கு பின்னர் நடிக்கப்போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.
அப்பட ஷூட்டிங் முடிந்தபோது கூட கண்ணீர்மல்க ரசிகர்களிடம் இருந்து அவர் விடைபெற்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது. அதுமட்டுமின்றி இப்படத்தில் அவர் சீதையாக நடிக்கவும் சமூக வலைத்தங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக சிக்கிய சர்ச்சை என்றால் அது விக்னேஷ் சிவன் உடனான நெருக்கமான காதல் தான். ஏற்கனவே இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த நயன்தாரா கொஞ்சமும் அசராது மூன்றாவதாக விக்னேஷ் சிவனை காதலிப்பதாக வெளியான செய்தியை அனைவரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த காதல் எத்தனை ஆண்டுகளுக்கு என்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உண்மை காதல் ஜெயிக்கும் என்று நிரூபித்து காட்டி 7 ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பின் இந்த ஆண்டு அவரை பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டார்.
நயன்தாரா-விக்கியின் இந்தத் திருமணம் சர்ச்சையில் சிக்காமல் நடைபெற்றாலும், அது முடிந்த உடனே அவர் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது திருமணம் முடிந்த உடன் நயன் - விக்கி தம்பதியினர் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
அப்போது கோவில் வளாகத்தில் நடிகை நயன்தாரா, காலணி அணிந்து வலம் வந்தது பலரிடையேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்த அவரின் கணவர் விக்னேஷ் சிவன், இது தெரியாமல் நடந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா சிக்கிய சர்ச்சை என்றால் அது அவர் குழந்தை பெற்றது தான். அதாவது திருமணமான நான்கே மாதத்தில் தங்களுக்கு குழந்தை பிறந்துவிட்டதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் தான் அவர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றது பலருக்கும் தெரியவந்தது. அதிலும் அவர்கள் சட்ட ரீதியான விதிகளை மீறியதாக கூறப்பட்ட நிலையில், தாங்கள் முறைப்படி தான் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்று கொண்டதாக தெரிவித்ததோடு மட்டுமின்றி தங்கள் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்துகொண்ட உண்மையையும் வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
இவ்வாறு நயன்தாரா நடிகையானதில் தொடங்கி தாயானது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அவற்றால் துவண்டுவிடாமல் சிங்கப்பெண் போல் ஒவ்வொரு சர்ச்சைகளையும் கடந்து வந்தது தான் அவரின் வாழ்க்கையில் அவர் பெற்றுக் கொண்ட தனிச்சிறப்பு. இவ்வாறாக இன்றும் சர்ச்சை நாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
Listen News!