தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. அதுமட்டுமல்லாது அந்தக் காலத்திலேயே ஏராளமான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை அடித்திருக்கின்றார். மேலும் இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது சினிமா நடிகைகளான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார். அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சைதை சாதிக் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர் பெயர் குறிப்பிட்ட அந்த நடிகைகளிடம் மன்னிப்பு கேட்கும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
பின்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டும், இனிமேல் இதுபோல் பேசமாட்டேன் என்றும் சைதை சாதிக் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு நீதிபதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.
இந்த நிலையில் சைதை சாதிக் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்று தற்போது குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து குஷ்பூ கூறுகையில் ''அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும், எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். அவர் ஒரு கோழை. அவர் அதை ஒருபோதும் செய்யமாட்டார்" என்று தெரிவித்திருக்கின்றார்.
இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!