1985ஆம் ஆண்டு ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான சீதா. அதன் பிறகு ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சீதா தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் குடும்பத்தோடு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், அந்த கல்யாண புகைப்படத்தை பார்த்துதான் பாண்டியராஜன் சார் என்னை அந்த படத்தில் நடிக்க அழைத்தார்.
முதலில் நடிக்க விருப்பமே இல்லாமல் தான் சென்றேன், அப்போது பாண்டியராஜன் அவர்தான் இந்த ஒரு படத்தில் நடிங்க, பிடிக்கவில்லை என்றால், படிக்கபோங்க என்றார். ஆனால் முதல் படத்திலேயே படம் ஹிட்டானதால், அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன். ஆனால், ஆண்பாவம் படத்திலேயே நான் நடிக்கமாட்டேன் என்று நினைத்தார்கள். தண்ணீர் தூக்கிவிட்டு வரும் சீனில் நான் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குநர் என்னை திட்டியதால், அழுதுக்கிட்டு நடிக்க மாட்டேன் என்றேன் அதன் பின் என் அப்பாதான் என்னை சமாதானப்படுத்தினார்.
அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது தான் குருசிஷ்யன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நான் ஒரு மார்டன் பெண் ரோல் என்பதால் நடிக்க சம்மதித்தேன். அந்த படத்தில் குதிரை சவாரி செய்வேன், குடித்துவிட்டு ஆடுவது போல ஒரு பாட்டு வரும். அந்த பாட்டில் பெருசா கவர்ச்சியே இருக்காது.
இந்த படத்தைப்பார்த்த பாலச்சந்தர் சார் கால் பண்ணி, என்ன சீதா இப்படி நடிச்சி இருக்க, நல்ல கதாபாத்திரம் வந்துட்டு இருக்கும் போது இவ்வளவு கிளாமர் தேவையா இனி மேல் இப்படி நடிக்காதே என்றார். அடுத்து விசு சார் கால் பண்ணி, என்ன சீதா, என்ன கேரக்டர் இது, உனக்கு கிளாமர் சரி வராது, உனக்கு குடும்பபாங்கான ரோல் தான் சரி, நீ இந்த மாதிரி நடிச்ச அந்த மாதிரிதான் ரோல் வரும் என்றார். அவர் சொன்னதும் என்னடா இப்படி சொல்லிவிட்டாரே என்று வருத்தப்பட்டேன். இப்போது அந்த பாட்டை பார்க்கும் போது இதற்காகத்தான் இப்படி திட்டினார்களா என்று தோன்றுகிறது என்று பேட்டியில் சீதா கூறியுள்ளார்.
Listen News!