2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா, இன்றைய தினம் டெல்லியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில், 24 பிரிவின் கீழ் தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த முறை அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள், தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
காரணம் கண்டிப்பாக தேசிய விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன் போன்ற படங்கள் ஒரு பிரிவில் கூட தேசிய விருது கிடைக்காமல் போனது.ஆனால் கொஞ்சம் ஆறுதல் படும் விதத்தில், சிறந்த தமிழ் திரைப்படம் என்கிற பிரிவில் 'கடைசி விவசாயி' திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில், இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
மேலும் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற மாயாவா சாயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு, சிறந்த பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் கருவறை என்கிற ஆவணப்படத்திற்கு இசையமைத்த, ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், சிறந்த கல்வி திரைப்படம் என்கிற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதைத் தவிர நடிகர் மாதவன் நடித்து - இயக்கிய 'ராக்கெட்ரி' படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கப்பட்டது. அதேபோல் ஹிந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஷெர்ஷா' படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்குபாய் காத்தியவாடி' படத்தில் நடித்த நடிகை அலியா பட்க்கு வழங்கப்பட்டது.
மேலும் இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம், அதிக பட்சமாக 6 தேசிய விருதுகளை வென்றது. இந்நிலையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு, இன்று விக்யான் பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்ட பிரபலங்கள் அனைவரும் குடியரசு தலைவர் கைகளால் விருதுகளை பெற்றுக்கொண்டனர். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Listen News!