தமிழ் சினிமாவில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து அசத்தி இருக்கின்றார். பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக அரசியல் பற்றி பல விடயங்களை மிகவும் துணிச்சலாக பேசி வருகிறார்.
அதிலும் குறிப்பாக பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்பேட்டியில், ''சமீப காலமாக நான் அரசியலில் அதிகளவில் தீவிரம் காட்டி வருகிறேன். இதனால் ஒரு காலத்தில் என்னோடு இணைந்து நடித்தவர்கள் இப்போது சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை" எனக் கூறி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிக்கப் பலரும் பயப்படுகிறார்கள். என்னோடு நடித்தால் அவர்களை மற்ற இயக்குநர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோர்களோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது. அந்த பயத்தோடு என்னை விட்டு அவர்கள் விலகுகிறார்கள்" எனவும் கூறி உள்ளார்.
மேலும் "இது என் சினிமாவில் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக நான் கொஞ்சமும் வருந்தவில்லை. அப்படிப்பட்டவர்களை என் வாழ்வில் இழக்க நான் தயாராகவே இருக்கிறேன். எப்படிப்பட்ட விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இப்போதுதான் நான் மேலும் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு "எனது குரலை ஒலிக்கச் செய்யாவிட்டால் ஒரு நடிகனாக மட்டுமே இந்தப் பூமியில் நான் இறந்து விடுவேன். நிறைய நடிகர்கள் மவுனமாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூற நான் விரும்பவில்லை. ஒரு வேளை அவர்கள் பேசினால் அதனால் வரும் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது என்று நினைக்கிறேன்" எனவும் மிகவும் துணிச்சலாகப் பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ்
Listen News!