நடிகர் அருள்நிதி சமீபகாலமாக கிராமத்து கதைகளை தேர்வு செய்வதை விடுத்து த்ரில்லர் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் கிராமத்து ஆக்ஷன் ஸ்டைல் படத்தில் நடித்து உள்ளார். அதாவது 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் மூர்க்கையன் (கோபக்காரன்) பெயருக்கு ஏற்றவாறே முதல் காட்சி முதல் கிளைமேக்ஸ் காட்சி வரை நடித்து மிரட்டி உள்ளார் அருள்நிதி. இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் உடைய திரை விமர்சனம் குறித்து நோக்குவோம்.
படத்தின் கதைக்களம்
இப்படத்தில் ராமநாதபுரம் மேலத்தெரு, கீழத்தெரு பிரச்சனையைத் தான் இயக்குநர் கவுதம் ராஜ் கையாண்டுள்ளார். அதாவது மேலத்தெருவை சேர்ந்த நாயகன் அருள்நிதிக்கு கீழத்தெருவை சேர்ந்த சந்தோஷ் பிரதாப்புக்கும் சிறு வயது முதலே நல்ல நட்பு ஏற்படுகிறது. சிறு வயதில் அருள்நிதியின் உயிரை சந்தோஷ் பிரதாப் காப்பாற்றுவதால் அந்த நட்பு நெருக்கமாக மலர்கிறது. ஆனால், சாதிய வெறியில் ஊரிப்போன அருள்நிதியின் அப்பாவாகிய யார் கண்ணனுக்கு இவர்களின் நட்பு சுத்தமாக பிடிக்கவில்லை.
அந்தவகையில் முன்னாள் ஊர் தலைவராக செயல்பட்டு வந்த யார் கண்ணன் கட்சியில் தற்போது ஆளுமை செலுத்தி வரும் வில்லன் ராஜசிம்மன் கட்சியில் தனது பலத்தைக் காட்ட ஊர் முழுக்க பேனர் வைக்கிறார். அந்த சமயத்தில் அவர் வைத்த பேனரை சந்தோஷ் பிரதாப் கிழிக்க அதன் மூலம் நடக்கும் சண்டையில் சந்தோஷ் பிரதாப் அடுத்த கலையரசனாக மாறி இந்த படத்திலும் கொல்லப்படுகிறார்.
இருப்பினும் படத்தில் செம ட்விஸ்ட்டாக அந்த கொலைப் பழி அருள்நிதி மீது விழ, தப்பித்து தலைமறைவாகும் அருள்நிதி தனது உயிர் நண்பனை கொன்றவர்களை தேடிப் பிடித்து சூரசம்ஹாரம் செய்வது தான் இந்த கழுவேத்தி மூர்க்கன் படத்தின் மீதிக் கதையாக அமைந்துள்ளது.
பலம்
இப்படத்தில் அருள்நிதிக்கு கழுவேத்தி மூர்க்கன் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
அதேபோல் நாயகியாக வரும் துஷாரா விஜயன் காதல் காட்சிகளில் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். அந்த கிஸ் சீன் வேறலெவல் சம்பவமாக அமைந்துள்ளது.
அத்தோடு சண்டைக்காட்சிகளில் மாஸ்டர் கணேஷ் குமார் புழுதி பறக்க, ரத்தம் தெறிக்க, வீரம் திமிர சண்டைக் காட்சிகளை அமைத்து ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆக்ஷன் படத்தையே கொடுத்திருக்கிறார்.
மேலும் டி. இமானை கொஞ்ச நாட்களாக காணவில்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் பாடல்கள் மற்றும் பின்னணியில் மனுஷன் பிரமாதமாக பிரித்து மேய்ந்திருக்கிறார்.
ஆகவே சாதிய படமாக செல்லாமல், சாதியத்தை தாண்டி மனிதத்தையும் நட்பையும் கடைபிடிக்க வேண்டும் என்கிற படமாகவே அமைந்தது இந்த படத்திற்கு பெரும் பலமாக உள்ளது.
பலவீனம்
படத்தின் கதை பல படங்களில் பார்த்த அதே விஷயத்தை சொல்வது போன்று உள்ளது. அதாவது மேலத்தெரு, கீழத்தெரு கான்செப்ட்டில் இன்னும் எத்தனை படங்கள் வரப் போகுது தெரியவில்லை.
அதுமட்டுமல்லாது பாட்ஷா காலத்தில் இருந்தே நண்பன் மரணத்துக்கு ஹீரோ பழிவாங்குவது புதிதல்ல. இவ்வாறாக யூகிக்கக் கூடிய கதையில் இந்த படம் உருவானது தான் பலவீனம் ஆக பார்க்கப்படுகிறது.
தொகுப்பு
திரைக்கதை மற்றும் மேக்கிங் காரணமாக பழைய படத்தை பார்த்த ஃபீல் வராமல் இயக்குநரும் ஹீரோ அருள்நிதியும் பார்த்துக் கொண்ட நிலையில், இப்படம் வெற்றிப்படமாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளன எனக் கூற முடியும்.
Listen News!