கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்து 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். இப்படத்திற்கு இளையராஜா ரம்மியமான பாடல்களை அமைத்து கொடுத்தார். மேலும், கவுண்டமணி, செந்தில் காமெடி இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. எனவே, பல ஊர்களிலும் இப்படம் 100 நாட்கள் ஓடியது. சேலத்தில் ஒரு திரையரங்கில் இப்படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தில் கரகாட்ட கலைஞராக ராமராஜனும், கனகாவும் நடித்திருப்பார்கள். பல காட்சிகளில் ராமராஜன் தலையில் கரகம் வைத்து நடித்திருந்தார். தலையில் கரகம் வைத்தவாறே ஒரு சண்டையும் செய்திருப்பார்.
இப்படத்தில் இறுதியில் ஒரு பாடல் காட்சி வரும். அம்மன் முன்பு ராமராஜனும், கனகாவும் தங்களை நிரூபிக்க தீயில் இறங்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த காட்சியை ராமராஜனிடம் கங்கை அமரன் சொன்ன போது ‘இப்படத்தில் கரகம் வைத்தவாறு பல காட்சிகளில் நடித்துவிட்டேன். தலையே பாரமாக இருக்கிறது. மீண்டும் என்னால் கரகத்தை தலையில் வைத்து நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டாராம். எனவே, அப்பாடலின் இறுதியில் மட்டும் கரகம் வைத்து தீயில் நடந்து வருவது போல காட்சியை எடுத்து படத்தை முடித்துவிட்டனராம்.
Listen News!