இந்திய திரைப்பட நடிகைகளில் பிரபலமான ஒருவரே ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ராகுல் ப்ரீத் சிங்குக்கு கார்த்தி ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படம் தான் திருப்புமுனை படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே. படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாது தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும் நடிக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் சமீபகாலமாக ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவந்த படங்கள் யாவும் தோல்வி அடைந்தன. இதனால் அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும் எனவே திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு முற்று முழுதாக ஒதுங்க போகிறார் என்றும் கிசுகிசுக்கள் பரவின.
இந்த நிலையில் இதுதொடர்பாக ராகுல் ப்ரீத் சிங் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ''ஒரு நடிகையாக நான் நடிப்பு பசியில் மட்டும் தான் இருக்கிறேன். எனக்கு இருக்கும் நடிப்பு பசி கொஞ்சமும் குறையவில்லை. இந்த வருடம் இதுவரை எனது நடிப்பில் ஐந்து படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்போது எனது முழு கவனமும் அடுத்த ஆண்டு எத்தனை படங்களில் நடிக்க வேண்டும் என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது" எனக் கூறி இருக்கின்றார்.
மேலும் "நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் வரவேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வம் இருக்கிறதே தவிர வேறு எதன் மீதும் அக்கறை இல்லை. திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை'' எனவும் தெரிவித்திருக்கின்றார் ராகுல் ப்ரீத் சிங்.
Listen News!