தமிழ் சினிமாவில் தயார்ப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம்
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திரந்தனர்.இதனைத் தொடர்ந்து உதயநிதி பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர் நல துறைக்கு என்ன செய்ய போகிறீர்கள்?
பதில்: அத்தனை பேரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி. இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கும் போதும், விமர்சனங்கள் வந்தன. கண்டிப்பாக இப்போதும் விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் மீறி எனது செயல்கள் இருக்கும். என் மீதான விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலமே பதிலடி கொடுப்பேன். சட்டமன்ற உறுப்பினரான போதும் விமர்சனங்கள் எழுந்தன. என்னால் முடிந்த அளவுக்கு தலைவரின் ஆணையை ஏற்று இளைஞர் அணி துணை செயலாளராக மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அனைவரது ஒத்துழைப்போடும் பொறுப்பை உணர்ந்து சரிவர பணிகளை செய்வேன்.
சீனா போன்ற நாடுகளில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
பதில்: இப்போதுதான் அலுவலகத்துக்கு சென்று முதல் கையெழுத்தை போட உள்ளேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும் என்கிற ஐடியா உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கான பணிகளை தொடங்கி முடுக்கி விடுவதற்கான வேலைகள் நடைபெறும். அமைச்சர் பதவியை இன்னொரு கூடுதல் பொறுப்பாகவே பார்க்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும்.
உங்கள் மீதான எதிர்பார்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அனைவர் மீதும் எதிர்பார்ப்புகள் உள்ளன. வாரிசு அரசியல் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கெல்லாம் எனது செயல்களே பதிலாக இருக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!