இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சினம். த்ரில்லர் ட்ராமா படமாக உருவாகியுள்ள இப்படமானது செப்டம்பர் 16ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் தற்பொழுது நிறைவு பெற்றுள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் பாக்கியராஜ் சாந்தனு கூறியதாவது “அருண் விஜய் போன் செய்து என்னுடைய படத்தின் ஆடியோ லான்ச் இருக்கு, கண்டிப்பாக வந்திருங்க என்றார். எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். தனிநபராக அவரைப் பிடித்ததைத் தாண்டி, அவருடைய சினிமா வாழ்க்கை பயணமும் பிடிக்கும். பல இடங்களில் என்னை அவருடன் நான் பொருத்திப் பார்ப்பேன். பல பேர் அருண் விஜய்யை உதாரணமாகக் கூறித்தான் என்னை ஊக்கப்படுத்துவார்கள்.
மற்ற துறைகளில் திறமை இருந்தால் மட்டும் போதும். ஆனால், சினிமா துறையில் திறமையைத் தாண்டி வேறு சில விஷயங்களும் நமக்கு சாதகமாக நடக்க வேண்டியுள்ளது. எத்தனையோ தடைகள், விமர்சனங்களைத் தாண்டி இன்று தனக்கான இடத்தை அருண் விஜய் பிடித்திருக்கிறார். என்னுடைய ஒரு படம் சரியாக போகவில்லை என்று விஜய் அண்ணாவிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போது அவரும் அருண் விஜய்யை உதாரணமாகச் சொல்லித்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.
இத்தனை வருட கஷ்டங்களைத் தாண்டி இன்று நல்ல இடத்திற்கு அருண் விஜய் வந்துட்டாருல, அது மாதிரி உனக்கும் நடக்கும் என்றார். இத்தனை வருட போராட்டங்களை எப்படி கையாண்டீர்கள் என்று அருண் விஜய்யிடமே கேட்டேன். நம்ம வேலையை நாம சரியா பார்த்துட்டு இருந்தாலே ஒருநாள் அதுவா நடக்கும் என்றார். அதுவும் எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் ட்ரைலர் சிறப்பாக உள்ளது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள்” எனத் தெரிவித்தார்.
Listen News!