தமிழில் நிழல்கள் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி. தமிழில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையில் இவர் சினிமாவிற்கு வந்தார். ராம நாராயணின் சில படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வில்லனாக மட்டுமே நடித்து வந்தார் நிழல்கள் ரவி. பிரபல நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துள்ளார். ரகுவரன் சினிமாவிற்கு வந்த அதே காலக்கட்டத்தில்தான் நிழல்கள் ரவியும் சினிமாவிற்கு வந்தார்.
இவர்கள் இருவருக்குமே நிறைய ஒற்றுமை உண்டு. இருவருமே நல்ல உயரம், ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள். இருவருமே கதாநாயகன் ஆகவேண்டும் என்றே சினிமாவிற்கு வந்தனர். ஆனால் இருவருமே வில்லனாகதான் பிரபலமானார்கள்.
ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் ரகுவரன், நிழல்கள் ரவி இருவருமே வில்லனாக நடித்திருந்தனர். வில்லனாக நடித்த காலக்கட்டத்தில் பல அனுபவங்களை பெற்றுள்ளார் நிழல்கள் ரவி. அதில் ஒரு அனுபவத்தை பேட்டியில் பகிர்ந்திருந்தார்.1990 ஆம் ஆண்டு ராமநாராயணன் இயக்கத்தில் ஆடிவெள்ளி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகியை நிழல்கள் ரவி துரத்திக்கொண்டு செல்வார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை யானை மிதித்து அவர் சாவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
இதற்காக உண்மையான யானையை கொண்டு வந்திருந்தனர். பொதுவாகவே ராமநாராயணன் உண்மையாகவே விலங்குகளை வைத்து படமெடுக்க கூடியவர். அப்போது நிழல்கள் ரவியை தரையில் படுக்க வைத்து யானைக்கு சமிக்கை கொடுத்தனர். உடனே யானை அவரை மிதிக்க சென்றது.
அப்போது அங்கு நின்ற மனிதர் ஒரு சத்தம் கொடுத்ததும் நிழல்கள் ரவி நெஞ்சுக்கு அருகில் காலை கொண்டு வந்த யானை அப்படியே நின்றுவிட்டது. அந்த மனிதர் அப்போது சரியாக சமிக்கை கொடுக்கவில்லை எனில் அந்த யானை என்னை கொன்றிருக்கும் என பேட்டியில் கூறியுள்ளார் நிழல்கள் ரவி.
Listen News!