பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கோப்ரா'. மேலும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மீனாட்சி, பூவையார், ரோபோ சங்கர், இர்பான் பதான், ஆனந்த்ராஜ், மியா ஜார்ஜ் என மிகப்பெரிய திரையுலக பட்டாளமே நடித்திருந்தனர்.
இப்படமானது கடந்த ஆகஸ்ட் 31-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி இருந்தது. மேலும் தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். அத்தோடு இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
ரசிகர்களிற்கு இடையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படமானது பல மோசமான விமர்சனங்களை எதிர்நோக்கி இருந்தது. அதற்கான காரணம் அப்படத்தின் உடைய நீளம் தான்.
சினிமாப் படங்களை பொறுத்த வரையில் பொதுவாக படங்கள் 2.30 மணிநேரத்திற்குள் எடுக்கப்படும். ஆனால் 'கோப்ரா' படமானது 3 மணிநேரத்திற்கு மேல் எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களிடையே இருந்தும் பல எதிர்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியது. இதன் காரணமாக படம் பார்ப்பவர்கள் எல்லாம் "ஏன் இவ்வளவு நீளமான படம் எடுத்தீர்கள்" என்ற கேள்வியினை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு நேற்று மாலை முதல் அப்படம் திரையிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் விஜய் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் "2.30 மணிநேரத்துக்கு மேல் படம் எடுத்தால் நல்ல படமாகவே இருந்தாலும் தோல்வி அடைந்துவிடும்" என நடிகர் விஜய், பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருக்கின்றார்.
#ThalapathyVijay about film duration 🌟pic.twitter.com/FMIrAdfLu4
மேலும் அதில் அவர் "இன்றைக்கு இருக்கும் புது இயக்குநர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவங்களோட எல்லா படமும் நான் பாக்குறேன். புது புது ஐடியாவோட நல்ல நல்ல படங்கள் பண்றாங்க. ஆனால் 2.30 மணிநேரத்துக்குள்ள உங்க கதைய சொல்லி முடிச்சிடுங்க.
அதுக்குமேல போச்சுனா, படம் நல்லாவே இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தை பார்க்குறதுக்கு பதிலா அவங்க வாட்ச்ச பாக்க ஆரம்பிச்சிடுவாங்க" என மிகவும் நகைச்சுவை கலந்த வகையில் பேசி இருக்கின்றார்.
அத்தோடு "ரொம்ப நேரம் படம் எடுத்தா பாம்பு கூட கீரி கிட்ட தோத்துப்போகும்” எனவும் அதில் அவர் கூறியிருக்கின்றார். விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய இந்தக் கருத்தானது தற்போது கோப்ரா படத்துக்கு அப்படியே பொருந்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது "அன்றே கணித்தார் நம்ம தளபதி விஜய்" என குறிப்பிட்டு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.
Listen News!