தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல ஆண்டுகளாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. பல படங்களில் நடித்துள்ள இவருக்கு 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பின் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான தீஷா பதானி என்பவர் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது இயக்குநர் பாலா இயக்கிய 'வணங்கான்' படத்தையும் கைவசம் வைத்திருந்த சூர்யா, சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றினை விடுத்திருந்தார். அதாவது இந்தப் படத்தின் கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாததால் அவர் இப்படத்தில் இருந்து விலகுவதாக பாலாவே அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண்விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சூர்யா கைவசம் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் 'வாடிவாசல்'. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
அத்தோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கப்படவில்லை. ஆனால் இடையே டெஸ்ட் ஷூட் மட்டும் நடத்தினார்கள். அதன்பின் இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை காலமும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நேற்றைய திடீரென வாடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது தமிழ்சினிமாவில் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் வாடிவாசலும் ஒன்று. அதிலிருந்து சூர்யா எப்படி விலக முடிவு செய்தார் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எல்லாம் தாறுமாறாக நடக்கத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த படக்குழு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தவகையில் சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' திட்டமிட்டபடி உருவாகும் என்றும், சிவா படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் சூர்யா 'வாடிவாசல்' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டும் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.
Listen News!