தமிழ் சினனிமாவில் காதலில் விழுந்தேன் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சுனைனா. இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் "ரெஜினா". தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் நடைபெற்றது.
இதில் திரைப்படத்தின் இயக்குநர் டாமின் டி சில்வா மற்றும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான சதீஸ் நாயர், நடிகை சுனைனா உள்ளிட்ட பட குழுவினர் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சுனைனா ரெஜினா திரைப்படத்திற்காக இரண்டு மாதம் தொடர்ந்து நடித்துள்ளதாகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் நிலையில் தனக்கு இந்த கதை பிடித்திருந்தது எனவும் தெரிவித்தார்.
தான் ஒரு ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் எனவும் நல்ல கதையாக இருந்தால் எந்தவித கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அதே அழகோடு இருப்பதன் ரகசியம் குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு கதைக்கு தகுந்தார்ப்போல் தன்னை மாற்றிக்கொள்வது தான் என பதிலளித்தார்.
முன்னேற்றம் என்பது கிடைக்க அதிகம் உழைக்க வேண்டும் எனவும் தன்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு தன்னுடைய குடும்பமும் ஒரு காரணம் என குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் இறுதியில் டீசர் விழாவில் நடிகை சுனைனா நடித்து வெளிவந்த மாசிலாமணி திரைப்படத்தின் ஓடி ஓடி விளையாடு பாட்டிற்கு நடனமாடியதுடன் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் உனக்கென நான் எனக்கென நீ என்ற பாடலையும் பாடி அசத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!