கே.பாக்யராஜ் இயக்கிய 'பவுனு பவுனுதான்'என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் போண்டா மணி, இவர் இதனைத் தொடர்ந்து வடிவேலு, விவேக் இவர்கள் இருவரது கூட்டணியிலும் நடித்து மிகவும் பிரபலமானார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் போக, சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அவரை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
மேலும், நடிகர் பார்த்திபனும் போண்டா மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை அவருடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்கிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள போண்டா மணி, தனது நிலையறிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனே உதவியதாகக் கூறியுள்ளார்.
அதில், அஜித்தின் மேனேஜர் தன்னை தொடர்புகொண்டு கடிதம் கேட்டார். அதனை அஜித் சாரிடம் கொடுத்து மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி பெற்று தருவதாக கூறினார். அதேபோல், விஜய்யின் மேனேஜரும் என்னை தொடர்புகொண்டு பேசினார். எனது மருத்துவ செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அரசு உதவி மூலம் செய்வதாக இருந்தால் 5 ஆண்டுகள் ஆகும்.
அதனால் தான் இந்த உதவியை எதிர்பார்த்திருந்தேன். இல்லையென்றால் என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்ற கவலையில் இருந்தேன். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னிடம் போனில் பேசினார். மேலும், உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்த ரஜினி சார், மருத்துவ சிகிச்சையின் போது மேலும் பண உதவி செய்கிறேன் எனக் கூறினார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். போண்டா மணியின் இந்த பேட்டியை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!