சூப்ரிம் ஸ்டார் சரத்குமாருக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இணையதளம் ஒன்றுக்கு நேற்று நடிகர் சரத்குமார் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:‘‘பொன்னியின் செல்வனில் எனக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு மணிரத்தினத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
வானம் கொட்டட்டும் ஷூட்டிங் அப்போ, நான்கு முறை மணிரத்தினம் வந்தார். இப்போ எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சரத்குமார் அந்த ரோலில் என்ன செய்கிறார் என்பதை பார்க்க தான் அவர் வந்திருப்பார் என்கிற சந்தேகம் எனக்கு வருகிறது.
அதன் பிறகு என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார்கள். வானம் கொட்டட்டும் படத்தின் டிஸ்கஸாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது பொன்னியின் செல்வன் வாய்ப்புக்கான அழைப்பு என்பது பிறகு தான் தெரிந்தது.
ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது. உலக அழகியை கட்டிப் பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இதைக் கண்டு, படப்பிடிப்பு தளத்தில் பலரும் “நான் பெரும் பாக்கியசாலி" என்றனர்.
பள்ளி காலத்தில் இருந்து நான் உடலை பராமரித்து வருகிறேன். என் அப்பா தான் அதற்கு காரணம். உடல் ஆரோக்கியம் பற்றி தான் அவர் அதிகம் பேசுவார். அவர் ஒரு பாக்ஸர். அவரிடம் இருந்து தான் நான் அதை பழகினேன்.
காலையிலும் மாலையும் பல் துலக்குவது, காபி குடிப்பது மாதிரி உடற்பயிற்சி செய்வேன். நான் மது குடிக்கமாட்டேன், சிகரெட் பிடிக்க மாட்டேன். 5 மார்க் கம்மியா வாங்குனா தற்கொலை, காதல் தோல்வி என்றால் தற்கொலை. இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோம் என்பதை முதலில் உணர வேண்டும். அப்படி பார்த்தால் 2 ஆயிரம் முறை நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். நான் எடுத்த படம் நஷ்டமாகி தெருவுக்கு வந்துட்டேன். எல்லாத்தையும் வித்துட்டேன். மவுண்ட் ரோட்டில் இருந்து வீட்டுக்கு வர என்னிடம் பணம் இல்லை. 5 ரூபாயை கையில வெச்சுட்டு ஆட்டோவில் ஏறினால், அதிகமாக வந்துவிடுமோ என்று மீட்டரை பார்த்துக் கொண்டே வருவேன்.
என் நண்பர் சுந்தரேசன், இரவு 12 மணிக்கு வந்து வீட்டு கதவை தட்டினான். ‘என்னடா இந்த நேரம்’ என்று கேட்டேன். ‘உன் பாட்டு கேட்டேன் ரேடியோவில் , உன்னிடம் பணம் இல்லையே, அதனால் ரூ.150 எடுத்து வந்தேன்’ என்று கூறினான். நான் அந்த அளவுக்கு மோசமான சூழலை சந்தித்தேன்.
ஆனால், அனைத்து சூழலிலும் வாழ தான் நினைத்தேன். எல்லாவற்றையும் சரி செய்யும் சூழல் கட்டாயம் வரும். நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கையை இழந்தீர்கள் என்றால், ‘எப்படா இவனை காலி பண்ணலாம்’ என இந்த உடல் காத்துக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு நோயை கொடுக்க காத்துக் கொண்டிருக்கும்.
65 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். 6 மாதம் முடங்கிப் போனேன். முதுகு எலும்பை எடுத்து அறுவை சிகிச்சை செய்தார்கள். 2 அடிக்கு கூட குதிக்க கூடாது என்றார்கள். எப்படி முடியும்? என் தொழிலே அது தானே என்று டாக்டர்களிடம் கூறினேன். ஒரு பத்திரிக்கையில், ‘சரத்குமாரின் கலைப்பயணம் முடிந்தது’ என்று போட்டிருந்தான். ஆனால், நான் திரும்ப வந்து தான், சூரியன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தேன்,’’என்றார்.
Listen News!