தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. இவர் இன்றைய தினம் தனது 69 ஆவது வயதில் உடல் நலக் குறைவினால் மரணமடைந்துள்ளார். இவரின் இறப்பு ரசிகர்களை மட்டுமன்றி பிரபலங்கள் பலரையும் பாதித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் கருணாஸ் இதுகுறித்துப் பேசுகையில் "எனக்கு இந்த விடயம் ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது, நான் வெளியூரில் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருக்கின்றேன், இவர் பலரும் பாராட்டக்கூடிய ஒரு அற்புதமான மனிதர், யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் அணுகலாம். மிகச்சிறந்த இயக்குநராகவும் மனோபாலா திகழ்ந்தார்.
மேலும் காதல் கொண்டேன் படத்தை நாங்கள் இருவரும் தேனியில் பார்த்தோம். படத்தை பார்த்த உடன் செல்வராகவனுக்கும், தனுஷுக்கும் உடனே தொலைபேசியில் அழைத்து அவர் வாழ்த்து சொன்னார். நான் அப்போது நடிக்க வந்த புதிது. என்னையும் அவர்களிடம் பேச வைத்தார்" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "தயாரிப்பாளர் தேனப்பன் அலுவலகத்தில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். மனோபாலா ரொம்பவே செண்ட்டிமெண்ட்டானவர். சின்ன விஷயமாக இருந்தாலும் அதை எங்களிடம் பகிர்ந்துகொள்வார். எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு சிறந்த உணவை சொல்லி வாங்கி சாப்பிடு என கூறுவார். அவரது உயிரிழப்பு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்திருக்கிறது.10,20 நாளைக்கு முன்னாடி நல்லபடியாக இருந்ததாக பூச்சி அண்ணா எனக்கு போன் பண்ணி சொன்னாரு, ஆனால் இன்னைக்கு அவர் திடீரென இறந்துள்ளமை எல்லாருக்குமே பேரதிர்ச்சியாக உள்ளது" எனவும் கவலை கலந்த தொனியில் கூறியுள்ளார் நடிகர் கருணாஸ்.
Listen News!